Home English Tamil
     
   
 
 மக்கள் பணிகளை கழிவுஓயில் வீசித் தடுக்க முடியாது - ஈ.பி.டி.பி.யின் வலி.வடக்கு பிரதேச அமைப்பாளர்.
 

23.08.2012 - வியாழக்கிழமை

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடம் மீது சில விஷமிகள் கழிவுஓயில் வீசி சேதப்படுத்திய சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக வலி.வடக்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஈ.பி.டி.பி.யின் பிரதேச அமைப்பாளருமான இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு) தெரிவித்தார்.

புதிய கட்டிடத்தில் புதியதொரு சூழலில் பிரதேச சபை அலுவலகம் இயங்குவதை விரும்பாத தீயசக்திகளின் திட்டமிட்ட அநாகரீக செயலைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வெளியான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இப்பிரதேச சபையின் சிறப்பான செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் இப்புதிய கட்டிடத்தை நிர்மாணிக்கவென 6.8 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்து நேர்த்தியான முறையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு பணிகளையும் ஆரம்பிக்கவிருந்த நிலையில் இக்கழிவுஓயில் வீச்சுச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோன்றதொரு கழிவுஓயில் வீச்சுச் சம்பவம் கடந்த 2002ம் ஆண்டில் எமது கட்சியின் சார்பில் தெரிவான கரவெட்டிப் பிரதேச சபை அலுவலகம் மீதும் நடைபெற்றிருக்கிறது. அதே ஆண்டில் தெல்லிப்பளை குட்டியப்புலம் தபால் அலுவலகத்தின் மீதும் விடுதலையின் பெயரால் இவ்வாறானதொரு கழிவுஒயில் வீச்சு இடம்பெற்றிருக்கிறது.

அதன்பின்னர் பல நெருக்கடிகளின் மத்தியில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பிரதி முதல்வர் செல்லன் கந்தையா தலைமையில் யாழ்.பொதுநூலகத்தைப் புனரமைத்து மக்கள் பணிக்காக திறக்க முற்பட்ட சமயம், அம்முயற்சிகளை முடக்கும் வகையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையும் எமது மக்கள் நன்கறிவர்.

நீண்டகால அழிவு யுத்தத்தை நாட்டு மக்கள் அனைவருமே பெரும் விலைகொடுத்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த இயல்பான அமைதிச் சூழல் தொடர்வதை விரும்பாத சில தீயசக்திகளின் கோழைத்தனமான செயலாகவே இக்கழிவுஓயில் வீச்சுச் சம்பவத்தையும் நாம் கருதுகிறோம்.

மக்கள் அமைதியான சூழலில் வாழ்கின்ற போதும் தமிழ் மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளிவிடப்பட்டுள்ளதாகப் பிரசாரம் செய்து தம் அரசியல் வாழ்வை நகர்த்த விரும்புவோருக்கு இவ்வாறான பிரதேச சபை அலுவலகங்கள் புதிய கட்டிடத்தில் புதுப் பொலிவுடன் பணிகளை ஆரம்பிப்பது பெரும் ஆற்றாமையை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அனைவருமே புரிந்து கொள்வார்கள்.

இனத்தின் பெயரால் ஏமாற்று அரசியல் நடாத்துபவர்கள் இப்போதும் புலிப்பூச்சாண்டிகளைக் கிளப்பி தமது அதிகார கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவார்களாயின், அது வெறும் பகற்கனவாகவே இருக்கும்.

இடம்பெற்ற இந்தக் கழிவுஓயில் வீச்சுச் சம்பவத்தின் சூத்திரதாரிகளை விரைந்து கண்டுபிடிக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எமது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராது இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேச சபைகளின் சீரான செயற்பாட்டிற்கு உதவ வேண்டும் என தாம் கோருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.