Home English Tamil
     
   
 
 வதிரி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி அபிவிருத்தி நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்
 

12.08.2012 - ஞாயிற்றுக்கிழமை

வதிரி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

வடமராட்சி வதிரிப் பகுதியில் அமைந்துள்ள காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி அபிவிருத்தி நிலையத்திற்கு இன்றையதினம் (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் மேற்படி நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினூடாக 5 இலட்சம் ரூபாவையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினூடாக 5 இலட்சம் ரூபாவையும் வழங்கவுள்ளதாகவும் இத் தொழிற்துறை சார்ந்தவர்களுக்கு வங்கிகளினூடாக கடன்திட்டங்களை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கியதுடன் ஏனைய தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இதனிடையே வதிரிப் பகுதியில் புதிதாக உள்ளக விளையாட்டரங்கொன்றை அமைப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் உறவுகளின் நிதியுதவியுடன் தொடக்க வேலைகளை ஆரம்பிக்குமாறும் மேலதிக உதவிகளுக்கான ஒத்துழைப்பையும், ஒத்தாசையையும் தமது கட்சி வழங்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கீழ் வதிரியில் அமைந்துள்ள காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி அபிவிருத்தி நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி அமைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உடனிருந்தார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.