| | 11.08.2012 - சனிக்கிழமை
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் நாம் எவற்றை சாதித்தோம் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய தேவைப்பாட்டின் அவசியம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர் என்ற வகையில் எனக்கு உண்டு.
கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் அபிவிருத்தி செய்து முன்னோக்கி செல்லவேண்டியவர்களாகவுள்ளோம். இதை நாம் ஒருபோதும் வீரப்பேச்சுக்களால் செய்யமுடியாது. எனவே பதவிக்கு வரும் அரசுகளோடு பேரம்பேசும் சக்தியாக நாம் மாறவேண்டும்.
அந்தவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய நாம் எமது செயலாளர் நாயகமும் கௌரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையின் கீழ் எமது அரசியல் பயணமானது இணக்க அரசியலூடாக பயணித்து எந்த தமிழ் தரப்பினராலும் செய்ய முடியாதவற்றை நாம் செய்துகாட்டியிருக்கிறோம். அத்தோடு தொடர்ந்தும் செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கை எமது தலைவருக்குண்டு. நிச்சயம் நடக்கும் என்பதே எமது திடமான முடிவு.
2011 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது கட்சி (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி) இணக்க அரசியலின் வெளிப்பாடாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அமைப்பின் அங்கத்துவ கட்சியாக தேர்தல் களத்தில் போட்டியிட்டது. 3082 வாக்காளர்களைக் கொண்ட 47.5 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதுமான நெடுந்தீவு பிரதேச சபையின் ஒன்பது உறுப்பினர்களுக்காக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையில் பன்னிரண்டு போட்டியாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவைத்தோம். நாம் மக்களிடம் பொய்வாக்குறுதியளித்து வாக்கு கேட்கவில்லை. ஒரு பிரதேச சபையால் செய்யக்கூடிய விடயங்களையே மக்களிடம் கொண்டு சென்றோம்.
தேர்தல் முடிவுகளின்படி எமது தலைமையில் எட்டு வேட்பாளர்கள் வெற்றிபெற்று நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவானோம். மாற்றுக் கட்சியிலிருந்து ஒருஅங்கத்தவர் வருகை தராதநிலையிலும் நெடுந்தீவு பிரதேசசபையின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றோம்.
அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருதிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் எ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரின் வழிநடத்தலிலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சில்வேஸ்திரி அலன்ரின், வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோர்களினது வழிகாட்டலிலும் எமது நெடுந்தீவு பிரதேசசபை செயற்பட்டு வருகின்றது.
நடைமுறைக்கு சாத்தியமானதும் இணக்க அரசியலினுடாகவும் வெற்றிப்பாதையை நோக்கிய பயணத்தில் ஒருவருடத்திற்குள் தவிசாளராகிய நானும் என்சக உறுப்பினர்கள் ஏழு பேரினதும் கூட்டுழைப்பினால் எமது நெடுந்தீவு பிரதேச சபை வெட்டுக்களி குளம் புனரமைப்பு, பெரியகளிக்குளம் புனரமைப்பு, தெற்பட்டைக்குளம் புனரமைப்பு, வெல்லைக்களி புனரமைப்பு, கேணிகள் ஆழமாக்கி துப்பரவு செய்தது, குமுதினி நினைவுத்தூபி மண்டபம் , இறங்குதுறை மண்டபம், மாவிலி அலங்கார வளைவு புனரமைப்புச் செய்தமை, கொல்களம் அமைத்தது, நெல்வரை விதானையான் மகன்கிணற்றடி வீதி புனரமைத்தது, நெடுந்தீவு கிழக்கு தீர்த்தக்கரை மண்டபம் அமைத்தது அலைஓசை கடற்றொழிலாளர் சங்கத்துக்கு குடிநீர்தொட்டி அமைத்தல், ஆவூர் சனசமூக நிலையம் புனரமைப்பு, விகாயடி தெற்கு கூடலை வீதி திருத்தியது, முருகன் கோவில் கோபாலபிட்டி வீதி திருத்தியமை, பிரதான நீர்க்குழாய் மாற்றியமை, பொதுநூலக மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தது. புதிய கிணறு ஒன்று அமைத்ததும், பழைய கிணறு ஆறும் புனரமைத்ததும் மத்தி பெருக்கடி பிள்ளையார் கோபுரப் புனரமைப்பு, புனித தோமையார் ஆலயம் ஒலிபெருக்கி, சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.வித்தியாலய சுற்றுமதில், யா/நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய மடிக்கணனி, சுப்பிரமணிய வித்தியாலய வகுப்பறை மறைப்பு, வைத்தியசாலை துவிச்சக்கரவண்டி தரிப்பு நிலையம், சென்ஜோண்ஸ் முன்பள்ளி தளபாடம், சென்ஜோண்ஸ், சென்அரனீஸ், ஸரார், உதயசூரியன், சென்அன்ரனீஸ் யூத், பல்துறை, ஐக்கியதீபம், விளையாட்டுக்கழகங்களுக்கான பெண்களுக்கான விளையாட்டு உடை, ஆலமாவனப்பிள்ளையார் கோவில் புனரமைப்பு நிதி, மாவிலி துறைமுகம் ஆளமாக்குதல். குடவிலி, வெல்லை, காளாமுனை மீன்பிடித்துறைமுகங்கள் புனரமைப்பு, விவசாய சங்கங்களுக்கான உழவு இயந்திரம் வழங்கப்பட்டது, பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு லொறி, கடன் என்பனவும், நெடுந்தீவு பிரதேச சபைக்கு உழவு இயந்திரம், தண்ணீர் பவுசர் என்பன பெறப்பட்டது, புதிய பஸ்வண்டி பெறப்பட்டது, இடம்பெயர்ந்தவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கியமை, கடற்றொழிலாளர் சமாசத்துக்கு கடனுதவி, அமைச்சரின் உதவியுடன் மாவட்ட வைத்திய அதிகாரி நியமனம், மற்றும் தாதிய உத்தியோகத்தர் நியமனம் ஆகியவற்றை பெற்றுக்கொடுத்தோம்.
அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் ஒருவருடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். எமது சபையில் எதிர்க்கட்சி ஒன்று இருந்தாலும் அவர் எமது சபை நடவடிக்கையில் பங்கேற்காதது மனவருத்தப்படவேண்டிய நிலையிலும் நாம் எட்டுபேரும் ஒரு குடையின் கீழ்தான் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறோம். காரணம் நாம் எமது சபைக்குட்பட்ட விடயங்களையே கையாள்கின்றோம். சபை மாதாந்தக் கூட்டங்கள் ஆரம்பித்தவுடன் எங்கள் எட்டு பேரின் மனங்களிலும் எப்படி எமது சபைக்குட்பட்ட அபிவிருத்தியில் பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவே நாம் உன்னிப்பாக ஆராய்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி அதனை சிறப்பாக அமுலாக்கியும் வருகின்றோம்.
தீவகப் பிரதேச சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளினைப்போன்று நாம் மக்களிடம் சுயநிர்ணயம் கேட்டு மக்களை ஏமாற்றுகின்றவர்களல்ல. நாம் குறுகிய நோக்குக் கொண்டவர்களல்ல. தூரநோக்கினைக்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம். எமது தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் பயணத்தில் நிச்சயமாக தமிழ்பேசும் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்குண்டு.
எமது சபையின் செயற்பாட்டு வெற்றிக்கு அடிப்படையாக இருப்பவர்கள் எம்மை நம்பி எமக்கு வாக்களித்த எமது பிரதேச மக்களும் எமது சபையின் செயலாளர் உள்ளிட்ட சபையின் உத்தியோகத்தர்களினதும் இடைவிடா முயற்சியும் மாகாண உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பிராந்திய உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினதும், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்கள், ஆலய பரிபாலனசபையினர் மதகுருமார்கள் ஊக்குவிப்புமே காரணமாகும் என்பதனை மகிழ்வுடன் இச்சமயம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தானியேல் றெக்சியன்
தவிசாளர்,
நெடுந்தீவு பிரதேச சபை |