|
| | 18 ஆவது உலக இளைஞர் மாநாடு தொடர்பில் கலந்துரையாடல் - அமைச்சர்கள் பங்கேற்பு |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
ஈக்குவடோர் நாட்டில் இவ்வாண்டு நடைபெறவுள்ள 18 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான மாநாடு தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றிருந்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த மன்றத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் (19) இடம்பெற்றது.
இதன்போது 18 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான மாநாடு தொடர்பில் இலங்கை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் பொருட்டு இம் முன்னேற்பாட்டுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதன்பிரகாரம் ஈக்குவடோரில் நடைபெறும் இம்மாநாட்டிலும் பாசிசவாதத்திற்கும், ஏகாதிபத்தியவாதத்திற்கும், ஜனநாயகவிரோதிகள் காலனித்துவவாதத்திற்கும், யுத்தத்திற்கும் பலவந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற கைப்பற்றுதலுக்கும், அநீதியான மாற்றங்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் அதேவேளை, சமாதானம், சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்றிற்குமாகவும் பிரஸ்தாபிக்கப்படவுள்ளன.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் இலத்தீன் அமெரிக்கா நாடான ஈக்குவடோரில் நடைபெறும் இம்மாநாட்டிற்கான இலங்கையிலிருந்தும் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்களான 100 ற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள அதேவேளை, ஏனைய பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்தது.
இவ் உலக இளைஞர் மற்றும் மாணவர்களுக்கான 17 ஆவது மாநாடு கடந்தாண்டு தென்ஆபிரிக்காவில் நடைபெற்றிருந்தது.
இவ்முன்னேற்பாட்டு கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்த அதேவேளை பிரதியமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும், தென்ஆபிரிக்க, கியூபா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும்; கலந்து கொண்டனர்.






 |
|
|
| | கிழக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறைகளை மேம்படுத்துவது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து |
|
| | 19.06.2013 – புதன்கிழமை
கிழக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் பொருட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அபிவிருத்தி (ACTED) நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான நன்கொடை உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
முயற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1.5 மில்லியன் ரூபா வீதம் அறுபது மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் பொதிகள் உள்ளடங்கலாக நிலையான சொத்துக்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினூடாக குறித்த அமைச்சின் கீழான கைத்தொழில் துறைகள் மேம்படுத்தப்படும் அதேவேளை, உற்பத்திகளின் ஏற்றுமதி மற்றும் அவற்றினது சந்தைவாய்ப்பு பெறுமதியும் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
அத்துடன் முயற்சியாளர்கள் இத்திட்டத்தின் ஊடாக கூடிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, நவீன வடிவமைப்பு மற்றும் சக்திமிக்கதுமான உற்பத்திகளுடன் பொருளாதாரரீதியாக பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தக்கூடிய நிலைதோன்றியுள்ளது.
அதுமட்டுமன்றி தொழில் முயற்சியாளர்கள் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தமது உற்பத்திகளை தரமிக்கதாக மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்திக் கொள்ளமுடியும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் அரச சார்பற்ற நிறுவனமான அக்ரேட் நிறுவனம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளது.
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பாரிய செயற்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இவ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனத்தின் (ACTED) இலங்கை வதிவிட பிரதிநிதி அன்ட்வியூசற்றிங் அவர்களும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.


 |
|
|
| | தமிழ் பேசும் மக்களையும் மண்ணையும் நேசித்த உத்தம தலைவர் தோழர் பத்மநாபா. - ஈ.பி.டி.பி.யின் மாவட்ட அமைப்பாளர் கமல். |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
தமிழ் பேசும் மக்களையும் மண்ணையும் நேசித்த உத்தம தலைவர் தோழர் பத்மநாபா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அலுவலகத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா) அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் மோகன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாகிகள் தின நிகழ்வில்; கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றும் போது, தமிழ் மக்களை நேசித்த உத்தம தலைவர் தோழர் பத்மநாபாவின் நினைவு நாளை முன்னிட்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியால் இத்தினத்தில் நடாத்தப்படும் தியாகிகள் தினத்தில் நாம் ஒன்றுகூடியிருக்கின்றோம். உயிர்நீத்த எமது தோழர்களுக்கும், உன்னத உத்தம தியாகிகளுக்கும் இத்தினத்தில் இந்த மண்ணில் மரியாதை செலுத்துவதையிட்டு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மிகவும் பெருமிதமடைகிறோம். இங்கே பல கட்சிகளின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளீர்கள்.
மக்களையும், மக்களின் விடிவையும் நேசித்த தோழர் பத்மநாபாவை 1990ம் ஆண்டு காலப் பகுதியில் பாசிஷ வெறிகொண்ட புலித் தலைமை ஏவல் கூட்டத்தினாலும், எட்டப்பர்களினாலும் தமிழ் நாட்டில் வைத்து சுட்டு அழிக்கப்பட்ட நாள் இன்றைய நாள். அன்றைய தினம் நான் அந்த புலி பாசிஷவாதிகளின் பாதாளத்தில் அடைக்கப்பட்டிருந்த போது, அருகாமையில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டன. தோழர் சுபத்திரனின் தாயாரும் அந்த இடத்தில் இருந்தார். கேட்டால் உங்கள் தலைவரைக் கொன்றுவிட்டோம் என்று கூக்குரலிட்டனர்.
அவர்களின் ஆற்றலும், அறிவும் அந்தளவு தான் என்றாலும், அந்தத் தலைமையின் கொள்கை, கடந்த கால வழிமுறைகள் எங்களுடைய மக்களுக்குப் பெற்றுத் தந்தவை அனைவரின் உள்ளங்களிலும் ஞாபகம் இருக்கலாம். வெறும் அழிவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. தான் நேசித்த மண்ணையும், மக்களையும், தோழமையையும், தனக்கான தலைமைப் பண்புகளையும் நிறைவேற்றுபவர் தான் சிறந்த தலைவர். அந்த வகையில் தான் எமது தோழர் பத்மநாபா அவர்கள், தான் இருந்த காலத்தில் தனது கடமைகளை நேர்த்தியாகச் செய்தவர். போராட்ட அமைப்புக்களுக்கு இடையேயும் ஐக்கியத்தை விரும்பியவர்.
அந்த நேர்த்தியான குணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஷவாதிகளின் ஏவலர்களினாலேயே தமிழ் நாட்டில் அவர் கொல்லப்பட்டார். புலிப் பாசிஷவாதிகளின் கொலைத் தாண்டவம் அங்கு மட்டும் நின்று விடவில்லை. எத்தனையோ உத்தமர்கள் இலங்கை மட்டுமல்லாது, பிறநாடுகளிலும் கொன்றொழிக்கப்பட்டனர். சொந்த மக்களுக்காகவும், எமது தேச விடிவுக்காகவும் தோற்றம் பெற்ற அமைப்புக்கள் எல்லாம் ஒரு உன்னத கொள்கையோடு கடந்த காலத்தில் ஆயுதம் தூக்கியவர்களே. அந்தக் கொள்கையையும், எண்ணத்தையும் திசை திருப்பியவர்களும் எங்களுடைய தமிழ் தலைமைகள் தான். தவறான தமிழ் தலைமைகளின் கடந்த கால வழிநடத்தல்கள் தமிழ் மக்களை அதளபாதாளத்திற்கு இட்டுச் சென்றதே வரலாறு. சுயலாப தமிழ் தலைமைகளினதும், ஆதிக்க வெறிபிடித்த புலிப் பாசிஷவாதிகளினதும் முடிவுகள் எமது தமிழ் பேசும் மக்களுக்கு விடிவைத் தந்திருக்கின்றன. ஆனால், புலிப் பசிஷவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் முடிவுகள் எங்களுக்கு பலமானதொரு தேசத்தை உருவாக்கித் தருவதற்காக அன்றைய தினம் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் அன்றைய தினம் விதைக்கப்பட்டதற்கான காரணம் பாசிஷ வெறி. பாசிஷத்தால் பல தோழர்களை இழந்தவர்கள் இன்று தங்களுடைய நலனுக்காக கூட்டுச் சேர்ந்தது தான் கவலைக்குரிய விடயம். ஒவ்வொரு தோழருடைய உயிர்களையும் பறித்தவர்களைப் பழிவாங்குவது எமது இலக்கல்ல. அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து இந்த உறவுகளை வேதனைப்படுத்துவது தான் வேதனையாக இருக்கிறது. ஆகவே, பதவிகளுக்காக பறிக்கப்பட்ட உயிர்களை மறக்கக் கூடாது. புலிப் பாசிஷவாதிகளினால் புத்திஜீவிகள் என தமிழ் மக்களின் ஆணி வேர்களாக இருந்த பலர் கருவறுக்கப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் இங்கே ஒரு அஞ்சலிக் கூட்டம் கூட நடாத்த முடியாது. இவர்களை மறந்தவர்கள், மறுக்கப்பட்டவர்கள். தோழர் சுபத்திரன் படுகொலை செய்யப்பட்ட போது இவருக்குரிய இறுதி யாத்திரையைக் கூட இங்கே செய்ய முடியாத நிலையில் எங்களுடைய உறவுகள் தள்ளப்பட்டிருந்தன.
எமது தோழர்களின் உயிர்கள் பறிக்கப்படும் போது பறித்தவர்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால், அன்றைய தினம் அவர்கள் போட்ட கூச்சல் இறுதியில் தெரிந்தது. இன்று எவருமே மரியாதை செலுத்த முடியாத பாசிஷவாதிகளாக மடிந்தார்கள். அவர்களுடைய முடிவுக்குப் பிறகு தான் நாங்கள் நிம்மதியான ஒரு சூழலை உருவாக்க முடிந்தது. அதற்கு அனைவருக்கும் நான் நன்றி கூற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைக் கழக தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முகுந்தன், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் விந்தன், நவசமசமாஜக் கட்சியின் முக்கியஸ்தர் தமிழன்பன், ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா) அமைப்பின் பொதுச் செயலாளர் சிறிதரன் சுகு உட்படப் பலர் அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.





 |
|
|
| | ஊர்காவற்துறை பகுதிக்கு ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விஜயம் |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
ஊர்காவற்துறை பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) விஜயம் மேற்கொண்டு அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டார்.
நேற்றைய தினம் ஊர்காவற்துறையில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு மண்டபம், சூரியவத்தை மின்சாரம், புளியங்கூடல் தெற்கு நழுங்கை வீதி, பொதுநூலகம், சின்னமடு உள்ளக வீதி, நாராந்தனை மத்தி ஆகிய பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது நாராந்தனை மத்திக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படுமென ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.
இதில் ஈ.பி.டி.பியின் ஊர்காவற்துறை பிரதேச இணைப்பாளர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.




 |
|
|
| | அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட ஒரு தொகுதியினர் கைது |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முனைந்த மேலும் ஒரு குழுவினர் இன்று காலை கிழக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்புக்கு கிழக்காக பயணித்துக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை திருகோணமலை பகுதியில் இருந்து அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவிருந்த நிலையில் இந்த குழுவில் இருந்து 80 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. |
|
|
| | இலங்கை மாணவர்களுக்கு 43 நாடுகளில் புலமைப்பரிசில்கள் உயர்கல்வியமைச்சர் தெரிவிப்பு |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
ஜனாதிபதி செயலகத்தினூடாக வருடாந்தம் 43 நாடுகளில் இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் பெற்றுக்கொடுக்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற புலமைபரிசில் சபை திருத்தச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இத்தகவலை தெரிவித்தார்.
இதன் படி வருடாந்தம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த புலமை பரிசில்கள் வழங்கப்படுவதாகவும் மற்றும் உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சமூக கல்வி அபிவிருத்தி நிறுவனம் மூலமும் மேலும் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கப்படுவதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தியா ரஷ்யா அவுஸ்திரேலியா சீன ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் இந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். |
|
|
| | முதன் முறையாக இலங்கை நீதிமன்ற வரலாற்றில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பம் |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஜீ. பி. எஸ். தொழில் நுட்பம் கடல் எல்லையை நிர்ணயித்து அடையாளம் காண்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.
மீனவர்கள், குற்றசெயல்புரிபவர்கள் கைதாகும் போது இந்திய கடற்பரப்பிலா அல்லது இலங்கை கடற் பரப்பில் இருந்தனர் என்ற பிரச்சினைக்கு இது தீர்வாக அமையலாம்.
குற்றம் சுமத்தப்பட்டோர் கைது செய்யப்படும் போது அவர்கள் கடலில் இருந்த இடத்தைச் சரியாக அடையாளம் காண ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தை பாவிக்க அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன அனுமதி வழங்கினார்.
நீதிமன்றத்தில் வீடியோ புரஜக்டரும் திரை ஒன்றும் பொருத்தப்படும். இதற்கும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். |
|
|
| | ஆசிய அழகு ராணி கிரீடம் இலங்கைக்கு |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
2013 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க அழகு ராணி கிரீடத்தை பெற்றுக்கொண்ணார்.
இந்த அழகு ராணி போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30 பெண்கள் கலந்துக் கொண்டனர். இதே வேளை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய அழகு ராணிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சிறிமாலீ பொன்சேகா அழகு ராணி கிரீடத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. |
|
|
| | கல்வி அமைச்சின் புத்தகக் கண்காட்சி 22ஆம் திகதி வரை |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி 22ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்று முன்தினம் இந்த புத்தகக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு முழுவதிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டாளர்களின் பாடநூல்கள் இங்கு காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
காலை 9.00மணி முதல் இரவு 7.00மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம் என கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஹேவா விதாரன தெரிவித்தார். |
|
|
| | வடக்கு வாக்காளர் பெயர்பட்டியல் திருத்தம் இரு வாரத்தில் நிறைவு |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
வடக்கு வாக்காளர் பெயர்பட்டியல் திருத்தங்கள் எதிர்வரும் இரு வாரகாலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (18) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் படி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு பிரதேசங்களிலிருந்து 1982ஆம் ஆண்டு முதல் வெளியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கும் விதத்தில் வடக்கு மாகாண வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தம் அமைந்துள்ளது.
எனினும் 2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்கள் இந்த விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. |
|
|
| | புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இலங்கை வருகை! |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் யாஸ்வர்தன் குமார் சின்ஹா கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.
முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிவகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர், வை.கே. சின்ஹா இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1958ம் ஆண்டு டெல்லியில் பிறந்த வை.கே.சின்ஹா, தமது 32வது வயதிலேயே இந்திய இராஜதந்திர பிரதிநிதி என்ற அந்தஸ்த்தை பெற்றவராவார். அவர் முதலில் அபுதாபியின் பிரதி தூதுவராக இருந்தார்.
அதன்பின்னர் பாகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகளின் உயர்ஸ்தானிகராகவும் இருந்துள்ளார். அத்துடன் அமெரிக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பிரதிநிதியாக கடமையாற்றியுள்ளார்,
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதியாகவும் செயற்பட்டுள்ள இவர், அரேபிய மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
|
| | உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நுட்ப பாடத்திட்ட அறிமுக தேசிய நிகழ்வு அலரிமாளிகையில் |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்டம் ஒன்றை கல்வி பொதுத் தராதர உயர்தர வகுப்பிற்கு அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு நாளை 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும்.
அமைச்சர்கள் மாகாண அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்த தேசிய வைபவத்தில் கலந்து கொள்வர். |
|
|
| | டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் |
|
| | 19.06.2013 - புதன்கிழமை
நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமொன்றைப் பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான விசேட தேசிய வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
வருடா வருடம் ஜூன், ஜுலை மாதங்களில் இந்நாட்டில் டெங்கு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவது வழமை. இதனைக் கருத்தில் கொண்டே இவ்வாரத்தைப் பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். சுகாதாரம், கல்வி, அரச பாதுகாப்பு, உள்ளூராட்சி, மாகாண சபைகள், சுற்றாடல், தகவல் ஊடகம், பொது நிர்வாகம் ஆகிய அமைச்சுக்களின் ஒத்துழைப்போடு இத்தேசிய வேலைத் திட்டம் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவ்வதிகாரி கூறினார். |
|
|
| | மீளக்குடியமர்ந்த பகுதிகளில் அமைச்சர் அவர்களின் வழிகாட்டலுடன் அபிவிருத்திப் பணிகள் - மருதங்கேணி பிரதேச செயலர் |
|
| | 18.06.2013 – செவ்வாய்க்கிழமை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டல் மட்டுமன்றி இப்பகுதியின் மேம்பாடு தொடர்பில் அவர் கொண்டுள்ள அக்கறையின் காரணமாகவுமே இங்கு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் நான்கு கிராமங்களுக்கான மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2010 ம் ஆண்டு இப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு அடிக்கடி வருகை தந்து மக்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் அதேவேளை, அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் துறைசார்ந்தோர் ஊடாக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இதனடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அமைச்சர் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து, கல்விவசதி, சுகாதாரம், குடிநீர்விநியோகம், இவற்றுடன் மட்டுமல்லாது 60 வீதமான மக்களுக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன்சார் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போதும் கூட அவரது வழிகாட்டலுடன் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக நான்கு கிராமங்களுக்கான மின்விநியோக திட்டத்தை கிடைக்கப்பெறச் செய்வதில் அமைச்சர் அவர்களின் பங்கு முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இப்பேற்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் எதிர்காலங்களிலும் அமைச்சர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
இதன்போது வடக்கின் வசந்தம் திட்டப் பணிப்பாளர் குணசீலன் உரையாற்றும் போது, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கின் வசந்தம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 600 கோடிரூபா செலவில் வடமாகாணத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

 |
|
|
| | இலவச பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்கள் வறியமாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்தும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் |
|
| | 18.06.2013 - செவ்வாய்க்கிழமை
வறிய மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே இலவச பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்களை நாம் விநியோகித்து வருகின்றோம் எனவே தொடர்ந்தும் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைக்கும் அவை கிரமமாக அனுப்பிவைக்கப்படும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த (15) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும்;போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் எழுபது விகிதத்திற்கும் மேற்பட்டமக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள். அக்குடும்பங்களைச்சேர்ந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைகாணப்பட்டது. எனவே அம்மாணவர்களும் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுமளவுக்கு கல்வித்தரத்தில் மேம்படவேண்டும் என்ற நோக்குடனும் அவர்களும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப்பெற்று சித்தி எய்தவேண்டும் என்ற எண்ணத்துடனுமே நாம் கிளிநொச்சிமாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவினூடாக தரம் ஐந்து வழிகாட்டி வினாத்தாள்களை இலவசமாக விநிநோகித்து வருகின்றறோம்;.
ஏனெனில் மாணவர்களை தரம் ஐந்திலிருந்தே கல்வித்தரம்மிக்கவர்களாக தயார்படுத்துகின்ற சந்தர்ப்பத்திலேயே எதிர்காலத்தில் உயர்வான அடைவுமட்டங்களை எட்டமுடியும் என்ற நோக்கிலேயே நாம் இவ்வாறான செயற்பாடுகளில் அதிக கரிசனை காட்டிவருகின்றோம். அத்தோடு கல்விப்புலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் முயற்சியுமே உயர்பெறுபேறுகளை பெறுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் என்பதை இறுதியாக வெளியான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் உணர்த்தியுள்ளன. இதேவேளை இன்று பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்விமேம்பாட்டில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர் அதிகரித்துவரும் பெறுபேறுகளின் உயர்விற்கு பெற்றோர்களின் அதிக முயற்சியும் முக்கியகாரணமாக அமைந்துள்ளது.
இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்வளம் காணப்படுகின்றது, அத்தோடு எதிர்காலத்தில் ஆசிரியர்வளம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதேவேளை அம்மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் இவ் ஆசிரியர்கள் அதிக கவனமெடுத்து வருகின்றனர். யாழ்மாவட்டம் போன்ற நீண்ட தொலைவிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்து மிகப்பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இவ்விடயத்தில் அதிக ஆர்வம்காட்டுகின்றமை மிகுந்த வரவேற்புக்குரியது.
இருப்பினும் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பாடசாலைகளும் இவ்விடயத்தில் அக்கறைசெலுத்த வேண்டும். ஒரு சில பாடசாலைகளேனும் இவ்விலக்கிலிருந்து விலகமுற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாவட்ட அமைவுமட்டம் பின்னடைவை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்களே உருவாகும். கடந்தவருடம் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளினடிப்படையில் மாவட்டத்தில் முப்பது விகிதமான மாணவர்களே அடைவுமட்டத்தை எட்டியிருந்தனர் ஆனால் இவ்வருடம் எழுபது விகிதமான மாணவர்கள் சித்தி எய்த வேண்டும் என நாம் எதிரபார்க்கின்றோம். அதற்கமைவாக தொடர்ந்தும் எம்மால் விநியோகிக்கப்படும் பீட்சை வழிகாட்டிவினாத்தாழ்கள் வழங்கப்படும் அதேவேளை மாவட்டத்தின் அனைத்துபாடசாலைக்கும் அவை கிரமமாக அனுப்பிவைக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சிவலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப்பரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம், ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மாவட்டத்தில் இணங்கும் பாடசாலைகளில் தரம் ஐந்து வகுப்பிற்கு கல்விகற்பிக்கும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


 |
|
|
| | போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது |
|
| | 18.06.2013 - செவ்வாய்க்கிழமை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ஒரு கிலோ ஹெரோயினை வைத்திருந்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
திஹாரியாவைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர் இந்தியாவின் சென்னையிலிருந்து இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார். |
|
|
| | தம்புள்ளையில் விபத்து இருவர் பலி |
|
| | 18.06.2013 - செவ்வாய்க்கிழமை
தம்புள்ளை - குருணாகல் வீதியில் மல்சிரிபுர, மெதமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன், லொறி மற்றும் முச்சக்கர வண்டி மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
சம்பவத்தில் வேனில் பயணித்த எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த 39 வயதான ஒருவரும் அவிசாவளையைச் சேர்ந்த 24 வயதான ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
வேன் அதி வேகமாக பயணித்தமையின் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொகருல்ல பொலிஸார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். |
|
|
| | வேலணை, புங்குடுதீவுப் பகுதி அபிவிருத்தி திட்டங்களை ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பார்வையிட்டார். |
|
| | 18.06.2013 - செவ்வாய்க்கிழமை
வேலணை மற்றும் புங்குடுதீவுப் பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) விஜயம் மேற்கொண்டு அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் பார்வையிட்டார்.
நேற்றைய தினம் புங்குடுதீவு சந்தை, வேலணை சந்தை, செட்டிபுலம் நேர்தார்ச்சி வீதி, ஐயார்னார் வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட தேவைகளை அமைச்சர் விரைவில் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச இணைப்பாளர் சிவராசா (போல்) உடனிருந்தார்.



 |
|
|
| | கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு |
|
| | 18.06.2013- செவ்வாய்க்கிழமை
மலையகத்திற்கு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான நீர்தேக்கங்கள் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளன.
இதனால் பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன. இந்நிலையில் மகாவலி கங்கையில் அமைந்துள்ள கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று காலை முதல் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் நாவலப்பிட்டி ரிவசைட் வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மாற்று பாதையை பயன்படுத்தம் படி இப்பகுதி மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நாவலப்பிட்டி, கம்பளை, கெலிஓயா, பேராதனை, பொல்கொல்லை பகுதியில் மாகவலி ஆற்றை அண்டி வாழ்பவர்களும் அதனை பயன்படுத்துபவர்களும் மிக அவதானமாக செயற்படும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. |
|
|
| | செட்டிபுலம் கிராமத்திற்கு விரைவில் மின்சாரம் - வேலணை பிரதேச சபைத் தவிசாளர் |
|
| | 18.06.2013 - செவ்வாய்க்கிழமை
வேலணை செட்டிபுலம் கிராமத்திற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பு வழங்கும் திட்டம் ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தினூடாக செட்டிபுலக் கிராமம் இருளிலிருந்து வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி வேலைத்திட்டம் பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களின் வழிகாட்டலில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
இவ்
வேலைத்திட்டத்தினை வேலணை பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயக
கட்சியின் வேலணை பிரதேச இணைப்பாளருமான சிவராசா (போல்) அவர்கள் நேரடியாக
சென்று பார்வையிட்டார்.
 |
|